தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா இன்று (செப். 19) வெளியிட்ட அறிவிப்பு:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று (செப். 09) முதல் 13-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வ்ப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தேவலா (நீலகிரி) 16, பந்தலூர் (நீலகிரி) 8, மேல் கூடலூர் (நீலகிரி) 5, கூடலூர் பஜார் (நீலகிரி) 4, பிறையார் எஸ்டேட் (நீலகிரி) 3, சேலம் (சேலம்), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 2, சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை), பெரியாறு (தேனி), அவலாஞ்சி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்
09.09.2021 முதல் 11.09.2021 வரை: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
12.09.2021, 13.09.2021: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகள்
09.09.2021 முதல் 13.09.2021 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments